நேத்து என்னோட ஃபிரண்ட் ஒருத்த்ன் எனக்கு போன் பண்ணிருந்தப்ப இந்த வலைப்பதிவப் பத்தி விமர்சனம் கேட்டேன். அதுக்கு அவன் “ம்ம்ம்… எழுதுறதுதான் எழுதுற நல்ல தமிழ்ல எழுத வேண்டியது தானே” னு சொன்னான். நான் அதுக்கு “விட்றா என்னோட சந்தோஷத்துக்காக என்னோட பானில எழுதறேன்”"னு சொன்னேன். இருந்தாலும் என்னோட பதிவுகள்ல சில நல்ல தமிழ்ல எழுதறதா முடிவு பண்ணிருக்கேன். அதோட ஒரு சிரு முயற்சி இதோ கீழ.
அது என் பத்தாம் வகுப்பு பருவம்…
காலையில் ஒரு கணக்கு வகுப்பறை…
எனது கணக்கு ஆசிரியர் கண்டிப்புக்கு பெயர் போனவர்…
தினமும் விதவித ”நீள” பிரம்புகளை கொண்டு வந்து எங்களை பயத்துக்குள்ளாக்குவார்…
ஒவ்வொரு நாளும் “இன்று என்ன பிரம்போ…” என்று ஒரு பெரிய விவாதமே எங்களுக்குள் நடக்கும்…
அவர் வகுப்பறைக்கு வருவதற்கு முன் வந்துவிடும் அவரது பிரம்பு….
அன்றும் வழக்கம்போல் அவருக்கு முன் வந்திறங்கியது பிரம்பு…
அவரும் சிறிது நேரம் கழித்து வந்து பாடத்தை ஆரம்பித்தார்…
எப்பொழுதும் அவரது வகுப்பு நேரங்களில் வகுப்பே மயான அமைதியாய் திகழும்…
அன்று வழக்கத்துக்கு மாறாக மாணவர்களுக்குள் சிறு சலசலப்பு…
அனைவருமே கவனித்திருந்தார்கள் அதை…
ஆனால் சொன்னால் என்ன ஆகுமோ என்று பதைபதைப்பு அனைவருக்கும்…
ஆசிரியரும் அவ்வப்போது “ம்ச்”… “ம்ச்”… என்று சொல்லி சலசலப்பை குறைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்…
ஆனாலும் அந்த முயற்சி அவர் கரும்பலகை பக்கம் திரும்பும் வரையே கைகொடுத்தது…
திடீரென ஒலித்தது ஒரு கனீர் குரல்… அது வகுப்பின் முதல் மாணவனான சண்முகராஜனின் குரல்…
“எக்ஸ்கியூஸ்மி சார்…” என்றான். கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர் திரும்பி “எஸ்” என்றார்.
“சார்… உங்க பேண்ட் ஸிப்…” என்றான் தழுந்த குரலில்… அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்தது வகுப்பின் சலசலப்புக்குக் காரணம்…
ஆசிரியர் கரும்பலகை பக்கம் திரும்பினார்…
இம்முறை அவர் திரும்பியது எழுதுவதற்காக அல்ல… அவர் உடையை சரி செய்து கொள்வதற்காக…
ஆங்காங்கே மெல்லிய சிரிப்பலைகள் ஒலித்தன…
வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியேறியதும்… ஒலித்தன காதை கிழிக்கும் வெடிச்சிரிப்புகள்…
- ர த் த ன்
